[11-12-2012]
அம்பாந்தோட்டை வீரகட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை பௌத்த பிக்குகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை தான் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவமானது இந்த நாட்டை புத்த பிக்குகலே ஆளும் தரப்பினராக எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நேற்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
அம்பாந்தோட்டை வீரகட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தியம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை விசேட திருப்பலி இடம் பெற்றுக்கொண்டிருந்த போது பௌத்த பிக்குகள் சுமார் 80 பேர் தலைமையில் வந்த சுமார் ஆயிரம் பேர் அடங்கிய கும்பலொன்று தேவாலயத்தினுள் அத்துமீறி நுளைந்து அங்கிருந்த வாகனங்களை உடைத்து சேதப்படுத்தியதோடு தீ வைத்தும் கொழுத்தியுள்ளனர்.
அத்துடன் ஆலைய பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.இந்த தாக்குதல் சம்பவத்தின் போது தேவாலயத்தினுள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பலர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 11 வருடங்களுக்கு மேலாக குறித்த தேவாலையம் அவ்விடத்தில் அமைந்திருந்த போதும் ஆலயத்தின் சகல நடவடிக்கைகளும் பௌத்த பிக்குகளிடமே அனுமதி பெற்று செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த தேவாலயம் மீதான தாக்குதல் உட்பட நாட்டில் பௌத்த பிக்குகளினால் பல கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களின் மூலம் சிறு பான்மையின மக்களுக்கு இந்த நாட்டில் எவ்வித உரிமைகளும்,சுதந்திரமும் இல்லை என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.
இந்த சம்பவங்களின் மூலம் பௌத்த பிக்குகளே இந்த நாட்டை ஆளும் தரப்பாக வெளிப்படையாக காட்டுகின்றனர்.
அம்பாந்தோட்டை மாவட்டமானது ஜனாதிபதியின் மாவட்டமாக காணப்படுகின்ற போதும் அங்குள்ள கிறிஸ்தவ மக்களுக்கும்,ஆங்குள்ள ஆலயங்களுக்குமான பாதுகாப்புக்கள் இன்று கேள்விக்குறியாகியுள்ளது.
தொடர்ந்தும் பௌத்த பிக்குகள் இவ்வாறான செயலில் ஈடுபடுவதன் மூலம் இந்த நாட்டில் அனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்த முடியாது.
எனவே ஏற்கனவே பல வணக்கஸ்தலங்கள் பௌத்த பிக்குகளின் தலைமையில் உடைத்து சேதப்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்று அந்த தாக்கம் மறைவதற்கு முன் ஜனாதிபதியின் மாவட்டமான அம்பாந்தோட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீதும், அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் மிகவும் வேதனையளிக்கின்றது.
இதனை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.
எனவே இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி உடன் தலையிட்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன். என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment